Sunday, 25 February 2018

கிணற்றில் விழுந்த பாம்பு

ஊரெங்கும் உலகெங்கும்
சுற்றிச் சுற்றி
அனுபவங்களை
விழுங்கத் துடித்த பாம்பு
பசித்த நேரத்தில்
தவளையைத் துரத்திப்போய்
கிணற்றில் விழுந்துவிட்டது

அழுக்கடைந்த கிணற்றின்
பாழடைந்த இடுக்குகளில்
தகாத உணவுகளைத் தின்று
விரும்பாத வாழ்வில் 
வழுக்கி வழுக்கி
விழுந்து கொண்டே இருக்கிறது
கிணற்றில்

கதிரொளி தந்த
கனவுகள் போதுமா?
அவற்றில் ஏறி
வெளியில் வருமா

யோசித்துத் தவம் இருக்கிறது
கிணற்றின் விளிம்பை
நோக்கிக் கொண்டே...

இருளெனும் வரம்

அலைந்து களைத்து
விழுந்துறங்க எத்தனிக்கையில்
எனக்குத் தேவைப்படுகிறது
இருள்

கலைஞர்களும் கவிஞர்களும்
இருள்காட்டிப் பயமுறுத்திவிட்டனர்
ஒளியைப் போலவே தானே
இருளும்

எனது 
கள்ளத்தனங்களை ஒளித்துவைக்க
கவலைகளைப் பயங்களைச்
சுயநலங்களைப் பூட்டிவைக்க,

எனது வேஷங்களின்
பூச்சுக்களைப் பாதுகாக்க..

என்னால் வஞ்சிக்கப்பட்டவர்களின்
முகம்
அதில் பதிந்திருக்கிறது
என்னால் கொலையுண்டவர்கள்
அதில் புதைக்கப்பட்டிருக்கின்றனர்
அடித்து நொறுக்கப்பட்ட 
எனது நல்லெண்ணங்கள்
அந்தக் கல்லறையில் மூழ்கிவிட்டன


இரவின் மடியிலிருந்து
இருட்குழந்தையை 
எடுத்துக்கொள்ளும் ஒளிவிளக்குகள்
அதைத் தங்கள் 
முதுகில் சுமந்து கொண்டிருக்கும்

ஒளிவெள்ளத்தில் மூழ்கிய 
எல்லோர் முதுகிலும்
வழிந்துகொண்டிருக்கும் அவமானங்கள்

நினைவினேலும் 
இருள் இருப்பது நல்லது
மீண்டும் அதன் கோரைப்பற்களில்
சிக்காதிருக்க

எல்லோருக்கும் தேவைப்படுவது
நேசமானது
மனிதராக நம்மை உணரவைப்பது
இருளெனும் ...வரம்