Tuesday, 27 October 2009

ஐயம்

செல்வங்கொழிக்கும்
நகரின்
வாகனங்களின்
இரைச்சல் மிகுந்த
இரவில்,
சோடியம் மஞ்சள் விளக்கொளியில்
அழுக்கு ஆடை
மூட
தன்னை மறந்து
திரும்பிப்படுத்தால்
விழுந்துவிடும்
எந்தக்கவலையுமின்றி
மேம்பாலத்தின்
ஓரடிச் சுவர்
விளிம்பில்,
தூங்கிக்கொண்டிருப்பவன்

எழுவானா ?

விழுவானா ?

Monday, 26 October 2009

கரைதல்



பெண்ணே
கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன

ஆணென்பதால் என்னை வெறுக்காதே
உன்னைப்போல் ஒரு பெண்தான்
என்னை வளர்த்தாள்

உன்னை கடுங்காவலில் வைத்தார்கள் என்னாதே
என்னை உனக்காகத்தான் ஒடித்தார்கள்
நாமும் ஒப்பினோம்
துணை தேவையென்று

என்
மூளையில் அழுகிய குப்பைகள்
என்று வெறுக்காதே
வானத்திலிருந்து எதையும் நான்
எடுத்து வரவில்லை

நாம் அழகானவர்கள் தாம்
மனதிலும் உடலிலும்

உன்
இதயத்திலும் கபடங்கள் உண்டு
என்னில் அதன்
எதிரொளி கண்டு
அஞ்சாதே
என்னிலும் பூமணம் உண்டு

நான் கடவுளாகவும்
நீ தேவதையாகவுமே
விரும்பினோம்
போட்டி போட்டுக் கொண்டு
சாத்தானாகவும்
பேயாகவும் ஆனோம்

இந்தச் சமூகம் மிகக் கொடுமையானது
நம் மீது மலைமலையாய்ப்
பாரங்களை ஏற்றிவைத்துவிட்டு
விளையாடு என்கிறது

ஒருவர் துயரங்ககளை
இன்னொருவர் பார்த்துச்
சிரிக்கலாம்
இதுதான் நமது சுதந்திரம்

எந்தச் சுவாமிகளாலும்
சட்டங்களாலும்
முடியாது
நீயும் நானும் மட்டுமே.

முடிந்தால்
சமாதானம் செய்துகொள்வோம்
பிரிவோம் அல்லது
சந்திப்போம்
ஆனால்
மகிழ்ச்சியாக இருக்க
முயலுவோம்

கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன.

Friday, 23 October 2009

அதிசயமான பெண்

மிக அழகான பெண்கள் என் ரகஸியம் என்ன
என்று வியக்கின்றனர்.

நான் அழகி அல்ல
என்னுடல், பேஷன் மாடல்களின் அளவுகளில் இல்லை

.நான் இப்படிச் சொன்னால் அவர்கள்
பொய்சொல்கிறேன் என்கிறார்கள்

என் கைகள் எட்டும் தூரம்
இடுப்பின் விரிவு
நடையின் அளவு
உதடுகளின் வளைவு

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அதுதான் நான்.

நீங்கள் எவ்வளவு விரும்புகிறீர்களோ
அவ்வளவு மென்மையாக
ஒரு அறைக்குள் நுழைந்து
ஒரு ஆணிடம் செல்கிறேன்
அவர்கள் எழுந்து நிற்கிறார்கள்
அல்லது
மண்டியிடுகிறார்கள்
ஈக்களாக என்னைச் சூழ்கிறார்கள்
தேனிக் கூட்டைப் போல்

நான் சொல்லுகிறேன்
என் கண்ணிலுள்ள கனல்
பற்களின் ஒளி
இடையின் மெல்லசைவுகள்
இவைதான்

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அதுதான் நான்.

என்னைக்கண்டு
ஆண்கள் வியந்துபோனார்கள்
எவ்வளவோ முயன்றார்கள்
என் சூட்சுமத்தைத்
தொடமுடியவில்லை
அவர்களால்

நான் அவர்களுக்குக் காட்ட முயன்றேன்
அப்போதும் கண்ணுக்குத் தெரியவில்லை
என்கிறார்கள் அவர்கள்

நான் சொல்கிறேன்
என் பின்புறத்தின் வளைவு
என் சிரிப்பின் பேரொளி
முலைகளின் குதியோட்டம்
என் இயல்பின் இதம்

நான் ஒரு பெண்
அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அது நான்தான்

இப்போது உங்களுக்குப் புரியும்
ஏன் என் தலை வணங்காதென்று
நான் கத்துவதோ குதிப்பதோ இல்லை
அல்லது மிக உரத்துப் பேசுவதும் இல்லை
நான் செல்வதை நீங்கள் பார்க்கும் போது
உங்களை நான் பெருமிதப் படுத்தவேண்டும்

நான் சொல்கிறேன்
என் பாதங்களின் ஒலி
கூந்தலின் நெளிவுகள்
என் உள்ளங்கை
என்னைக் கவனித்துக் கொள்ளும் தேவை

ஏனெனில்
நான் அதிசயத்திலும் அதிசயமான
பெண்
அது நான்தான்

****
மாயா ஏஞ்சலோ
மொழிபெயர்ப்பு வே.ராஜகோபால்

Wednesday, 21 October 2009

எத்தனைமுறை எதிர்த்தடித்தாலும்,


அதே வேகத்தில்

சுவரிலிருந்து வரும் பந்தென,

எனக்காக

வாசலில்

காத்திருக்கும்

தோல்விகள்



எதிர்பார்த்துக் கனவுகள் கண்டு

ஏமாந்திருப்பதில்

வீரன் நான்



வரலாற்றில் உருவமற்ற

தோல்வியுற்றவர்களைப் போலவே

வென்றவர்களும்

வார்த்தைகளாக நின்று விடுகிறார்கள்



யாருக்காகப் எழுதுகிறீர்கள்

கவிதைகளை

உங்கள் சுய சரிதைகளை?

யாருக்காக வைக்கிறீர்கள்

சிலைகளை?

அவை

மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும்

நோயாளியின்

மயக்க உளறல்கள்



பிரபஞ்சத்தில் புள்ளியிலும் சிறிதாக

மறையும் பூமி

அதில் புள்ளியிலும் சிறிதாக





உங்களுடைய அளவுகோல்களையே

உபயோகித்தாலும்

தோல்வியில்தான் முடியும் வாழ்வு

என்றென்றும்



நாம் நினைத்தபடி

வெல்ல முடியாததுதான்

பூமியில் எதுவும்

Monday, 12 October 2009

எளிதல்ல



ஐயா கனவானே

ஏழைகள் சாவதும் எளிதல்ல



செத்த அன்று செலவுகள் ஏராளம்

முதலில் வரும்

ஆஸ்பத்திரி,

டாக்டர்

லஞ்சம்

விருந்தினர் நிற்க இடம், நிழல்

உணவு,

ஐயர், சடங்குகள்,

வண்டி தள்ளுபவன்

குழி தோண்டுபவன்,

தீயெரிப்பவன்

என்று முடிவின்றித் தொடரும்…



ஆக்ஸிடெண்டில்,

கலவரத்தில்

வெள்ளத்தில்,பூகம்பத்தில்

சாவது நல்லதுதான்

கவர்மெண்ட் பணங்கிடைக்கும்

அதுதான் பிரார்த்தனை



ஏழைகள் சாவது எளிதல்ல….

Saturday, 3 October 2009

மலைகளிடையே பறக்கும் சிறுகுருவி

பறந்து பறந்தே பழகிவிட்டது



பசித்தால் இரைதெரியும் அதற்கு

கீழிரங்கும் எருமையின் முதுகில்

மீண்டும் மலைகளும்

நதிகளும் வானும்



பெருமலைகளை நோக்கியும்

முகில்களிடை விரைந்து பாய்ந்தும்

நதிகளில் தன் பிம்பம் கண்டும்

அருவித் துளிகளில் தன்னை மறந்தும்,

வெய்யில் எரிப்பில் கிறங்கி விழுந்தும்



தரைக்கு வராமலே இருக்க முனையும்

சும்மா கிட என்று சொல்லும் சொந்தமும்

வா வா என்று அழைக்கும் வானும்
காந்தி பிறந்த நாளில்




தினமும் கீரை விற்க வரும்

கிழவனின் குரலில்

இழையும் தனிமை

எப்போதாவதுதான்

என்னிடம் எழுகிறது



பாறையாய் புத்தகங்களைச்

சுமக்கும் குழந்தைகள்

என்றைக்காவது தான்

நான் பார்க்க நேருகிறது



தினமும் என்னால்

வதை பட்டுக் கொண்டிருக்கும்

மனைவியின் குரல்

எப்போதாவதுதான்

எனக்கு ஒலிக்கிறது


வேண்டுமென்றே நான்

பார்வையை விலக்கிக் கொள்ளும்

குஷ்டரோகியின்

வலி

எப்போதாவது தான் எனக்கு

அனுபவமாகிறது



எதுவேனும் செய்ய எத்தனித்து

வருடத்தில் ஒவ்வொருநாள்

இவர்களுக்கு செலுத்திவிடுகிறேன்

அஞ்சலி

 * * * * * * * * * * * * * * * * * * * * * *


எனது நடிப்பு




பாவியென்று மட்டும் என்னை அழைக்காதே

நல்ல மனிதனாக இருந்தது தவிர

நான் எதுவும் செய்யவில்லை



தோற்றுவிட்டேன் என்று மட்டும் நினைக்காதே

விளையாட்டை அனுபவிப்பதிலேயே

மகிழ்ந்திருந்தேன்

வெற்றியின் வெறியில் அல்ல



அதிகாரியாக மிடுக்கவில்லை என்று

நகையாடாதே

எளியவர்களின் துயரத்தை நான்

பார்த்திருந்தேன்



சாமர்த்தியம் இல்லையென்று

பழிக்காதே

தேவையில்லை என்றுதான்

நினைக்கிறேன்



எழுதத் தெரியவில்லை என்று

ஒதுக்காதே

அறிவினால் மட்டும் அன்பைப்

பகிர முடியாதென்று அறிந்திருக்கிறேன்

* * * * * ************   ******* * * * * *
 
 
 
 
கடவுளைத் தோற்கடித்தவன்





மழை நாளின் இரவில்

காணாமல் போன நண்பன்

கடற்கரையொரம்

படுத்திருப்பான்

அங்கே விளையாடும்

குழந்தைகளை

வேடிக்கை பார்ப்பான்

மனைவியுடன் அமர்ந்திருக்கும்

கணவன் சிரிக்கிறானா என்று

கவனித்திருப்பான்



உன்னுடன் வாழமாட்டேன்

என்று போன மனைவி

பிறக்காமல் போன குழந்தை

அழகிய பெண்ணாயிருந்தும்

வாழாவெட்டி என்று ஊரார் சொல்லத்

திரும்பி வந்து சிதைந்து கொண்டிருக்கும்

அழகு அக்கா

முன்னரே மணம் முடித்தாலும்

நாற்பத்தைந்து வயதில்

மனைவியுடன் சேரும் பாக்கியமுள்ள

அண்ணன்

அப்பா இருக்கும்போது மணம்முடித்தும்,

பிரிந்து வந்து, ஐம்பது வயதில்

கணவனுடன் வாழப் போன

மூத்த அக்கா



காட்டாற்று வெள்ளம் போல்

பாயும் நிகழ்வுகளின்

சூத்திரதாரி கடவுளென்றே

நினைத்திருந்தான்

பக்திப் பரவசத்தில்

பிறவிக்கடலைக் கடக்க

எத்தனித்தான்

சமூக நியதிகள்

அனைத்தும் காத்தான்

எதிலும் கிட்டவில்லை

மனஅமைதி



காணாமற் போன நண்பன்

கடற்கரையோரம்

தேடிக்கொண்டிருக்கக் கூடும்

 ஏதாவதொன்று

- - - - - - - - - ------ -------------------- ------------------
 
 
 
கலங்கரை சேருமா? கலங்குதல் நேருமா?


புலன்களை அடக்கியே புலம்புதல் ஆகுமா?

தவறுகள் தொடருமா? தவிப்புகள் அடங்குமா?

கவலைகள் தீருமா? கனவுகள் பொசுங்குமா?



இலக்கியம் ஊறுமா? இலக்கின்றி ஓடுமா?

உலகெனும் சேற்றிலே உழல்வதே நியாயமா?

கலைகளின் அருள்ஒளி கண்களில் வீசுமா?

பலபொருள் தேடலில் காலமே கரையுமா?



கடவுளைத் துதிப்பவன் கோவிலைச் சுற்றலாம்

மடங்களை மதிப்பவன் குருவிடம் கற்கலாம்

குடங்களைக் குடிப்பவன் குடித்தே அழியலாம்

இடவலம் என்றுநான் எங்குதான் செல்வதோ?



இன்றைய பசிக்கென இறைஞ்சினால் போதுமோ?

எதிர்வரும் நாளையின்(று) இருட்டிலே தூங்குமோ?

பதில்வரும் நாள்வரை பயணத்தை நிறுத்தவோ?

எதுவரும் என்றுநாள்? எண்ணியே ஏங்கவோ?