Wednesday, 30 December 2009

சிறு(திரு)வடி சரணம்


ஒரு சிறுமியின் சிரிப்பு
மிக அழகானது
அதன் ஓசை நம்மனதில்
இழுத்துவரும் எதிர்காலம்
பனிபடர்ந்தது
எனவே
சிறுமியோ இளம்பெண்ணோ சிர்த்தால்
பூக்களை நினைத்துக் கொள்ளலாம்

ஒரு சிறுமியின்/இளம்பெண்ணின்
உடல் எழிலானது
ஒரு பையனின் உடல்போலவே……
அதன் மென்மையில் உங்கள்
நினைவுத் தென்றலின்
இசைகேட்கலாம்

ஒரு சிறுமியின்/சிறுவனின் மனம்
நட்சத்திரங்கள் போல்
கேள்விகளால் ஆனது
உங்கள் மனத்திரையை விலக்கினால்
உலகையே ஒளியாகப் பார்க்கலாம்
பெண்ணின் துயர்


வாசிக்கப் படாத
அவளது வரிகள் காத்திருக்கின்றன
மனதில் ஒரு பெருந்தேராக

சின்னக் குழந்தையின்
சிரிப்பு அல்லது
கணவனின் நேசக்குரல்
எப்போதாவது கசியவிடும்
கண்ணீரில்
கொஞ்சம் வழுக்கி நகரும்

அலைந்து புரண்டு கொண்டிருக்கும்
நிலத்தடித் தணலின்
ஊற்றுக் கண்
திறந்தால்
தேரும் நகர்ந்துவிடும்
உலகும் எரிந்துவிடும்
என்றே
ஒருபோதும் திறவாதோ?

 
 
 

Saturday, 26 December 2009

அலங்காரம்


முன்னும் பின்னும்
கண்ணாடி
சிறு சலனத்தையும்
பலப்பலவாய்க் காட்டும்
எண்ணற்ற பிம்பங்கள்
எனக்கு மட்டுமே தெரியும்
நான் மேதைதான்

 
 
கடலின் மொழி


ஒவ்வொரு முறையும்
ஏதாவது சொல்ல வந்து
நான் கேட்க மறுப்பதால்
மீண்டும் சொல்லத்
தொடர்ந்து முயன்று வரும்
அலைகள்
ஒளியின் எல்லை


மாளிகைத் தோட்டங்களில்
வாள்களை மறைத்துவைத்து
கணவனின் பாடல்களுக்கு
இசையமைத்து
தெருவில் நின்று
வித்தைகாட்டும் பாவையர்
நிலவாக
வலம் வரலாம்

இடுப்பொடிபடும்
கருப்பாயி
வாயைத் திறக்கும்வரை

 
 
 
 
வறண்ட பாலைவனத்தின்
நீரற்ற பரப்பின் மீது
கிளைவிரித்துப் பரவும்
முட்செடி
அதன் கையலப் பட்டை இலையில்
விஷ முள்ளின் கீழே
ஒளிந்திருக்கும்
எப்போதோ வான்போட்ட
ஒரு பிச்சைக் காசென
இரு துளி ஈரம்
அதைத் தோண்டி எடுக்க
எத்தனிக்கும் வேறு வழியற்ற
எறும்பு
யாராவது வருவான்
உன்னையும் தேடி
பகிர்தல்

நான் என் இதயத்தைக்
கையில் எடுத்துக் கொண்டு
கூவிக்கூவி அழைக்கிறேன்
யார்கேட்டாலும் பிரித்துக் கொடுக்க விரும்புகிறேன்

கவிதையென்றோ உளறல் என்றோ
காதலென்றோ வேறு என்னவென்றோ
பெயர் வைத்துக் கொள்ளலாம்
இழுத்து இழுத்துச் சொருகிக் கொள்ளும்
எல்லா வரையறைகளையும் தாண்டி

நீ செய்தது எல்லாம் சரியாகவே இருக்கட்டும்
நான் செய்தது தவறாகவே இருக்கட்டும்
அதனாலெல்லாம் என்னவாகிவிடப் போகிறது?

நான் மோசமாகவோ
நீ புண்ணியவானாகவோ இருக்கலாம்
காற்றோ எதுவோ இருக்கிறதே
நாம் பகிர்ந்து கொள்ள

Tuesday, 22 December 2009

தொலைந்த வரி

வாசிக்கப்படாத கவிதைகள்
என்னவாகின்றன?

யாருக்கும் தெரியாமல்
ஆழ்கடலில் பூக்கும் ‘கோரல் ரீஃப்’
போல் ஆழ்ந்துவிடும்
பின்
அழுகிக் கெட்டுக் காய்ந்த
பிணங்களைப் போலாகிவிடும்

நிலத்தடியில் மறைந்துபோகும்
வேர்கள்
சிலநேரம் துளிர்விடக்கூடும்
அடுத்த தலைமுறையின் நினைவுகளில்

Monday, 21 December 2009

ஊர்மணம்

மாலைச் சூரியனின் மஞ்சள் ஒளியல்ல
மெல்ல தழுவிச் செல்லும் தென்றல் காற்றல்ல
நான் தினமும் பறித்துண்ணும் செம்பருத்தி மொக்கல்ல
சின்ன உறைக்கிணற்றின் உப்புத் தண்ணீரல்ல
வெள்ளிநுரை சுருண்டுவரும் கடல் அலையல்ல
காலையில் பனையோலையில் கிடைக்கும் பதனீரல்ல
ஓட்டைச் சிப்பியோ, கடற்கரைக் கரும்பொன்னோ
நடக்கக் கால்வலிக்கும் மணலோ அல்ல
அது வெற்று வார்த்தையுமல்ல, நிழலுமல்ல
எப்படிச் சொல்வேன் என் நகரத்து மகளிடம்?
உதற முடியாமல் என்னைத் தொடர்ந்துவரும்,
எல்லாம் சொன்ன பின்னும் நழுவிச் செல்லும்,
அதை

Saturday, 19 December 2009

விடை பெற்றுவிட்டோம் தோழர்களே

இனி யாருக்கும் உறுத்தாது
விதி பற்றிப் பேசலாம்
டாலரை அளக்கலாம்
நமக்கினி பயமேது?

கண்களை மூடிவிட்டோம்
காயங்களைப் போதையில்
மிதக்கவிட்டோம்
வலியே தெரியாது

துப்பாக்கி தூக்கிவிட்டோம்
இனி
முனகலும் கேட்காது

தூரத்தில் வானவில்லைக்
காட்டுகிறோம்
இனி இங்கு
வண்ணங்கள் ஒருபோதும் மாறாது
கோடிகோடியாய்ச்
சிற்றெரும்புகள் ஊர்ந்து செல்லும்
கறுப்புப் பாதையில்
நாற்றத்துடன் வளைந்தோடும்
கறுப்பு நதிகள்
வெள்ளை ஆடைகளுக்குள்
கறுப்பு மனங்கள்
வெள்ளை மனங்களுக்குக்
கறுப்பு விடைகள்

வெள்ளையடித்து விட்டோம்
எங்களின் மீது

ஒளிந்திருப்பது
நூற்றாண்டுகளின் இருள்

 
 
அவன் மாபெரும் கவிஞன்
என்று
நான்
எழுதாமலிருக்க முடியாது
குயில் கூவுதென்று
காகம் கரையாமல் நிறுத்துமா?
தந்தை மகனுக்கு ஆற்றும் நன்றி


என் அப்பாவுக்கு
எல்லாம் தெரியும்
அவர் கண்டுபிடித்த சூத்திரங்கள்
மிக எளிமையானவை
விரைவில் விடைகிடைக்கும்

கருவுற்றதும், கல்வி கற்றதும்,
காளையானதும் வேலைவந்ததும்
எல்லாம் அவர் செயல்

காதலிப்பதும், பிள்ளைபெறுவதும்,
காரில் போவதும் சோபாவில் அமர்வதும்
பெண்டாட்டியை அடக்குவதும்
அவருக்காக நான் செய்வது

உலகமே அவருடையதுதான்
அவரே மீண்டும் பிறந்தேனா?

 
 
ஒளிரும் வார்த்தைகள்


வார்த்தைகளின் நடனத்தில்
உயிர் எழுகிறது
அது உயரங்களிலும்
பள்ளங்களிலும்
உருண்டோடுகிறது

இந்த வார்த்தைகள் தானே
அகராதியில்
புதையுண்டிருந்தன
அடிமைகளின் வீடுகளில்
தூங்கிக் கொண்டிருந்தன
எஜமானர்களின் காலை
நக்கிக் கொண்டிருந்தன

அவனிடம் மட்டும்
தீயாக எப்படி எழுந்தன?
தோண்டி


அரசின் வார்த்தைகளில்
முப்பது வருடங்கள்
நசுங்கிய
என் வார்த்தைகள்
முனகவும் உபயோகப்படுவதில்லை

எஜமானனுக்காக, அவன் வாசலில்
காத்திருந்து பழகிய அவை
நிமிர முடியாதபடி
உடைந்து விட்டன

புதைந்து போன பொக்கிஷத்தை
நூற்றாண்டுகள் பின் தேடும்
ஆய்வாளன் போல்
தேடிக் கொண்டிருக்கிறேன்
என்னையும்
விடை கொடுத்தனுப்பிய வார்த்தைகளையும்
ஆய்வின் நீளம்


பட்டாம் பூச்சிகளுக்கு
உத்தரவிட்டாகிவிட்டது
பூக்களைத் தீண்டாதீர்
சோதனைச் சாலைகளில் மட்டுமே
அனுமதி உண்டு
விஞ்ஞானிகளின் மேற்பார்வையில்

சிறகுகளை வெட்டியாகி விட்டது
மலர்கள் கண்ணாடிக் கூடுகளில்
மகரந்தங்கள் சேகரிக்கப்படும்
சோதனைச் சாவடிகளின்
கண்ணாடிச் செவ்வகங்களில்
பூச்சிகள் அமர நாற்காலிகள்

அழகாக இல்லாத மொட்டுகள்
கருக்கப்படும்
அழகான பூக்களுக்குப்
பாதுகாப்புக் கொடுக்கப்படும்

தோட்டங்கள் அமைக்கவும்,
பூக்கும் காய்க்கும் காலம்
அனைத்தும்
சுகாதார விதிகளின் படி

புதிய பூக்களுக்கு
வளரும் வரை இரும்பிலும்
வளர்ந்த பிறகு தங்கத்திலும்
விலங்குகள் மாட்டப்படும்

நாம் கடவுளாக முடியாதென்று சொல்லி
மனிதர்களாகலாம்
இப்படி
செயற்கையாக எல்ல்ல்லாம் செய்துகொண்டே

 
 
 

Thursday, 10 December 2009

சட்டை உரித்தல்


ஒருமுறை பிறந்தேன்
பிறந்தபின்
பாம்புச் சட்டை உரிவதுபோல்,
அதன் உரிந்த சட்டையைப் போலவே
நான்
உயிரற்றுப் போய்விடாமலிருக்க
ஒவ்வொரு முறையும்
உரிக்கிறேன் என்னை
கொஞ்ச காலத்தின் பிறகு
மூச்சடைக்க வைக்கும்
தினசரிச் சாதாரணங்கள்
மாலைகளுடன் காத்திருக்கும்
நமக்காக

ஆனாலும்
இருளோ ஒளியோ
தெரியாத ஏதோ ஒன்று
தேவைப்படுகிறது
மீண்டும் உரித்துக் கொண்டு
தொடர்ந்து செல்ல

Tuesday, 8 December 2009

எல்லை


வெளியே சுவற்றில்
ஒட்டப்பட்டிருந்த பெண்
விரல்நீட்டி எச்சரித்தாள்
மனைவியிடம் சொன்னேன்
“போஸ்டரில் தானே ஏன் பயம்? என்றாள்
“அதனால்தான்” என்று தகித்தேன்
நகையெனப் படுவது யாதெனின்


இறுக்கப்பட்ட பழக்கங்களின் பெட்டியில்
பிணமாகக் கிடக்கிறது மகிழ்ச்சி
பதுக்கப்பட்ட தங்கம் போல
பார்த்துப் பாதுகாத்து
ரகஸியமாக அனுபவிக்கிறது
சுயநலம்

ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பார்த்துப்
புன்னகைக்க மறுக்கும் மனிதர்கள்
வீட்டுக்குள்
புரண்டு புரண்டு சிரிக்கிறார்கள்
பைத்தியக்காரர்களைப் போல

செதுக்கப்பட்ட சூத்திரங்கள்
அரங்கேறும் காலம்
சிரிப்புக்கான தருணங்களை
திரும்பியும் பார்ப்பதில்லை
அமுத சுரபியை யாரும்
சீண்டுவதில்லை

Wednesday, 2 December 2009

முட நகரம்




மாளிகைகளின் வரிசைகள்
வான்தொட பின்புறத்தில்
நிலத்தில் நிற்க வலுவின்றித்
தடுமாறும் குடிசைகள்

மாநகரின் சாலைகளின்
தெரிவதில்லை

கார்க் கண்ணாடிகளின்,
விலையுயர்ந்த
அழகு
மூக்குக் கண்ணாடிகளின்
கறுப்புத் திரைகளின் வழியே

பார்க்க விரும்புவதும் இல்லை
அதனால் இல்லாததாகிவிட்டது

தன்னை முடமாக்கிக் கொண்டு
தங்கக் கீரீடம் சூட்டி
மினுக்குகிறது மாநகரம்.
உட்கடல்


இந்த அலைகள்
கரை எதையும் தொடுவதில்லை
தன்னுள்ளே சுழன்று சுழன்று

எந்த நதியின் நன்னீரும்
இந்த அலைகளைத் தழுவியதில்லை
தன் உப்பே போதுமென


மழை விழுந்தால் குடித்துவிடும்.
இல்லையெனில், காத்திருக்கும்
அந்நீரும் தன்னீரென்றறிந்து