Thursday, 26 November 2009

பழைய முகம்


இந்தத் தெப்பக்குளத்தில்
நீரில் இறங்கி
கைவிரவி அலைஅலையாய்ப்
போகவிட்டு
ஏரிக்குக் கொடுத்த
என் முகம்
இங்கேதான் ஒளிந்திருக்கிறது

காய்ந்துவிட்ட வெடிப்புகளில்
யாரோ என்றோ பதித்த
காலடிச் சுவட்டில்
எதிரொளிக்கும் என்று
காத்திருக்கிறேன்
எடுத்துக் கொள்ள

Monday, 23 November 2009

தகுதி

தனிமையில் கதறும் என் குரல்
யார் காதுகளிலும்
விழுவதில்லை
என்னைப் பார்த்தால் உங்களுக்குத்
தூக்கம் வராமல் போகலாம்

இசைமிகுந்த இரவில்
என் குரல் அவலமானது
நெஞ்சின் ஈரத்தைக் கிளறக்கூடும்

நீங்கள் ஒருபோதும் கண்டிராத
புதிய மிருகம் நான்
இல்லை என்று அறிவிக்கப்பட்ட பிறகு
என்ன பெயரிடுவீர்கள் எனக்கு?

நகரங்களின் அடுக்குமாடி
இடுக்குகளில்
விலைகுறைந்த கள்ள மதுக்கடைகளில்
நெடுஞ்சாலையில்,
பத்திரிக்கைகளில், புத்தகங்களில்
மின்னற் பொழுதில் மறையும்
உருவம் என்னுடையது

உங்கள் மேலான நினைவுகளுக்குத்
தகுதியானதல்ல அது
மிதிபடும் ஏதோ ஒன்று


சின்னஞ்சிறு காலடிகள்
வைத்தேன்
உறுதியுடன்
புதுப் பாதையை நோக்கி


 சிக்கிச் சிதைந்தது காலடியில்
நான் வளர்த்த சிட்டுக் குருவி

பார்த்திருக்கலாம்
அது நின்றதை


கனவின் பாரத்தில்
கண்களும் இருட்டி விட்டன
வானத்தைப் பிடித்துத்
தொங்க முனைகையில்
கால்களைப் பார்ப்பதில்லை யாரும்

அதனடியில்
கசங்கும்
ஏதேனும் இருக்கக்கூடும்


கீழே மிதித்துத்தான்
எவ்வ வேண்டியிருக்கிறது
எதற்காகவும்…

Friday, 20 November 2009

வரைந்தவை


தொலைபேசியில்
மணிக்குப் பின் வந்தது
இருபது வருடங்களுக்கு முன்
தொலைந்து போன
குரல்

வாழ்க்கைக் கடலின் மேல்
பாலங்கட்டி,
துயரங்களைத் தாண்டிவரும்
புன்னகை

மீண்டும் மீண்டும்
வரைந்து பார்த்த
மன ஓவியங்களில்
அகப்படுவதில்லை
நிஜம்

Thursday, 19 November 2009

கனவு வானம்


என்னைச்
செதுக்கிக் கொண்டிருக்கும் போது
செதுக்கியது அலங்கோலமாகி
சிதறல்கள் சிற்பங்களாகி
கை விட்டுப் போனதை
அழகாய் இருப்பதாக
கற்பனை செய்து கொள்கிறது
மனம்

வரைந்து கொண்டிருக்கும்போதே
மறைந்துவிடும்
நீர்ச்சிற்பங்கள்
நிறைவளித்ததாய்
நீயும் நினைத்துக் கொள்

கனவுகள் வானில் தெரிந்தால்தானே
கால்கள் தரையில் நடக்கும்

Tuesday, 10 November 2009

பள்ளி எழுச்சி


சம்பளமாய் வரும்
டாலரில் மூழ்கி
தற்கொலை செய்துகொண்டது
அக்கினிக் குஞ்சு

கிம்பளமாய் வரும்
மில்லியன் டாலரில்
மூச்சு விடுகிறது அரசியல்

கும்பலாய் அலையும்
பரதேசிக் கூட்டம்
கூசி மறைந்து கொள்கிறது
இயலாமையில்

அம்பும் வில்லும்
தெருவோரத்தில் கிடக்கின்றன
துருப்பிடித்து

எம்பெருமானும் தம்மிடம்நீங்கி
நம்மிடம் வருவாரில்லை

யார்தான் பாடுவது
அந்தப் பாடலை?