Tuesday, 29 November 2016

கோழிகள்

குஞ்சுகளைக் கண்டஞ்சும்
கோழிகள்
ஒன்றும் அறியாமல்
வழிதடுமாறிவிடும்
கழுகுகளின் பார்வையில் விழுந்து
கதை முடிந்துவிடும்

ஆனாலும்
நடைபழகுவது
தனியே இருப்பது
போராடுவது
எல்லாம்
குஞ்சுக்கும் தெரியவேண்டும்
அதற்குத் தனியே போயாக வேண்டும்

குஞ்சுகளைக் கண்டஞ்சும் கோழிகள்
குஞ்சுகளாயிருந்தவைதான்
அதற்கும் முன்
முட்டைக்குள் முடங்கியவை
ஓட்டை உடைத்ததும்
உலகின் ஒளியில்
கண்கூசியதே

கோழிகள் அறியும்
ஆனாலும்
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன்குஞ்சு

கோழிக்கும் தெரியாது
குஞ்சுகளும் அறியாது
குஞ்சு எப்போது
கோழியாகிறது?

Friday, 16 September 2016

துடிப்பு

நீந்திக் கொண்டிருந்த காலம்
வளைந்தும் நெளிந்தும்
ஓடியும் துரத்தியும்
கொறித்தும், அரித்தும்
கழிந்தது

எவன் வீசிய வலையிலோ
சிக்கி, இழுபட்டு
நீருக்கும் மேல் மூச்சுத் திணறி
படகில் விழுந்து
ஐஸ் பெட்டியில்
சிற்றசைவில்
இன்னும் உயிரைப்
பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும்

ஒரு

சிறு


மீன்

Tuesday, 12 April 2016

விழிக்கும் தருணம்


இருட்டுக்குள்
எங்கோ தலைக்குமேல்
தெரியும் வெளிச்சம்

மிக உயரமாகத் தெரிவது
கிணற்றின் விளிம்புச் சுவர்கள்
யாராவது தண்ணீர் இறைக்கும் போது
அவர்களின் தலை

தண்ணீரும் பாசியும் பூச்சிகளும்
சமமாகத் தெரியும்

மூழ்குவதன் எல்லை
கெட்டித் தரையும்
அதில் விரித்த மண்ணும்

ஒரே பயம் பாம்புகள்
அவை பெரும்பாலும்
கிண்ற்றுக்கு வெளியே
வசிக்கின்றன

எப்போதாவது
தப்பித் தவறி
இறைக்கும் வாளியில்
மேல் சென்று
பரந்த வெளியில்
விழுந்து விடுவதும் உண்டு

மிகவும் அபூர்வமான
அத்தருணத்தில்
உலகம்
எல்லைகளற்றதும்
தானறியாததும்
என்று
வியக்கும் தவளையின்
கண்கள்