Wednesday, 30 December 2015

நான் காணும் உலகம்

சிறு கண்ணனைப் போலவே
இந்தப் பூமியைப்
பேரண்டத்தை விழுங்கி
என் உள்ளங்கையில்
உங்களுக்குக் காட்ட விரும்புகிறேன்
ஒரு கவிஞன் போல,
விஞ்ஞானி போல

சில நேரங்களில்
பூமியாகவோ
பேரண்டமாகவோ
ஆகிவிட விரும்புவதும் உண்டு
ஒரு துறவி போல.

எனக்கு அகங்காரமோ
பேராசையோ
உலகமும் அண்டமும்
உள்ளது உள்ளபடியே

பனித்துளியில் கடல் தெரிந்தாலும்
கடலிலிருந்து வந்ததே
பனித்துளி

Tuesday, 15 December 2015

நாம் யார்க்கும் குடியல்லேம்

எண்ணிலா அண்டம் இயற்கையில் எழுந்த
        இயல்பினை கண்டுபி டித்தோம்
    ஏகன னேகன் என்றெலாம் உரைத்த
        எவரது புளுகைம றுத்தோம்
வெண்ணிலா மீன்கள் செங்கதிர் உலவும்
        வீதியை அளந்துமு டித்தோம்
    விரைகிற செயற்கைக் கோள்களை அனுப்பி
        சனியையும் புகைப்படம் பிடித்தோம்

ஆழ்கடல் இறங்கி திமிங்கலம் சுறாமீன்
        கோரலின் சாரம றிந்தோம்
     ஆப்பிரிக்காவில் மனித குலத்தின்
        ஆரம்ப வாழ்வைப் புரிந்தோம்
பாழுடல் என்று ஒதுக்கிய உடலின்
        பாகமும் வேலையும் குறித்தோம்
     பவித்திர மான கடவுளின் தொண்டர்
        பார்க்கிற வகையில் விரித்தோம்

தத்துவம் என்று பித்தர்கள் பேசும்
        சாரமில் கதைதோற் கடித்தோம்
     தாமுயர் வென்று சாஸ்திரம் காட்டும்
        சழக்கரும் நடுங்கிட விழித்தோம்
மூத்தவர் சொன்ன முறைகளில் அடக்கு
        முறைகளை மூச்சொடெ திர்த்தோம்
    முன்னரோ இன்றொ சொன்னதைக் குறள்போல்
        சான்றுடன் பகுத்த றிந்தோம்

மறுவாசகம்

நமைப்புரந்த தாய்க்குலத்தின் நலம்வாழ்க உயிர்வாழ்க
இமைப்பொழுதும் தூங்காமல் இயங்குகிற செல்வாழ்க
ஆதிமுதல் நுன்ணூயிர்கள் ஒன்றொன்றாய்ப் பெருகியதற்
கேதும் இணையில்லா இன்பப் பூமியொன்றை
ஈன்ற கதிரோனும் அதையீன்ற பால்வெளியும்
தோன்றும் புவிக்கெல்லாம் தொடங்கும் கருந்துளையும்
எண்ணிலா விண்மீன்கள், எல்லையில்லா வான்வெளிகள்  
எண்ணிலா அண்டங்கள் எத்தனையோ சூரியன்கள்
எல்லாப் பொருளுள்ளும் இயங்குகிற அணுத்துகள்கள்
ஒல்காப் பெருமுயிராய் உதித்துவந்த கோடியுயிர்
புல்லாய்ப் பூண்டாய்ப்பல் மிருகமாய் மானிடராய்
உலகைவெல்ல வந்த உயிர்க்குலத்தின் தலைமகனாய்
திலகமிட்டு நிற்கும் திங்களும் செவ்வாயும்
என்றென்றும் வாழ்க, இவற்றையெல்லாம் கண்டுசொல
அன்றன்று அவதரிக்கும் அறிஞர்கள் வாழ்க

நானே கடவுளென்றும் நாமேபே ரண்டத்தின்
தானாதி பதியென்றும் தலைநிமிர்ந்து நின்றவரின்
பேரண்டப் புளுகெல்லாம் புரட்டிப் போட்ட
பேரறிஞன் கலிலியோவின் புகழ்வாழ்க அவர்தோளின்
மீதேறி நின்றுவிசை யென்றால் ஈர்ப்புவிசைஎன்று
ஆதாரம் சொன்ன நியுட்டன் புகழ்வாழ்க
எத்தனையோ கோடி யாண்டுகளே யானாலும்
எத்தனையோ கோடியுயிர் பூமியிலே வந்தாலும்
எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ சாமிகள்
பித்தரெனப் பேசிடினும் பெருஞானப் பெருவெளியில்
நிறைந்தெங்கும் ஓளிவீசும் நித்தியப் பேரொளியாய்
வரையில்லாப் பல்லுயிகள் வளரும் முறைகண்ட
ஒருஞானி டார்வின் தத்துவமே தழைத்திருக்கும்
ஒருநாளும் அழியாத பரிணாமத் துறைவாழ்க

ஆதி ஹைட்ரஜனின் அணுஎண் ஒன்றென்றும்
ஓதிவைத்துப் பின் ஒவ்வொரு மூலகமாய்
கண்டுகொண்ட ஞானியரும் மெண்டலும் கற்பித்தார்
ஒன்றொன்றாய் மூலகங்கள் கூடிக் குலவினவே
வேதிப் பொருளின் விளைவுகளால் இவ்வுலகும்
ஆதிப் பொருளும் அதற்கடுத்த உயிர்க்குலமும்
மெல்ல வளர்ந்து பரிணாமம் பெற்றனவே

தாயின் குணமும் தந்தையின் முகவடியும்
சேயின் குணமாக சேர்ந்துவரும் விந்தையின்
ஆய்வின் வழியாக மெண்டல் அறிந்துசொன்னார்
நோயும் நொடியும்தரும் வைரசு பாக்டிரியா
டிஎன் ஏ, ஜீன்ஹைபிரிட் செல்மைட்டோக் காண்டிரியா
என்றெல்லாம் இரவுபகல் ஏதுமின்றி ஆராய்ந்து
கண்டுசொல்லும் மனிதகுலக் கடவுள்விஞ் ஞானிகளே
கடவுள் படைத்திருக்கக் கூடுமதைக் கண்டதில்லை
திடமாய்க் கண்டவரோ தேடும்விஞ்ஞானியரே
அவரின்றி இந்நாளில அணுவும் அசையாதே
முப்பத்து முக்கோடி ஒளிஆண்டுக் கப்பாலும்
எப்புறமும் முடிவின்றி இயங்குகிற பிரபஞ்சம்
இன்றுநம் கையில் இருப்பதுவோ சிலகாலம்
நன்றும், புதியதுமாய் நாமே படைப்போமே
வெற்றி தோல்வியென்று எதுவும் நமக்கில்லை
பெற்றதெல்லாம் நமைப்புரக்கும் இயற்கைதரும் கொடையல்லால்
கற்றதும் இல்லை கண்டதும் இல்லைஇதைக்
கற்றவன் கற்றவன் இதுகல்லான் கல்லானே

அறிவு பெற்றவன்பலம்