Tuesday, 16 February 2010

வராத காகம்

இன்று வரவில்லை

என் வீட்டுக்கு
எப்போதும் வரும் காகம்

சோற்றுப் பருக்கைகள் காத்திருக்கின்றன சுவர் மீது
மனைவியும் அடிக்கடி பார்த்தாள்

திரும்பாமலே சென்றுவிடக்கூடும்
வருந்தாமலே வாழக் கற்றவை

ஆத்மாக்களைச் சுமந்தே
கருகிவிட்ட பறவைகள்
சேர்த்த பாவங்களை மின்கம்பிகளில் துடைக்க முயலும் போது
வெடிக்கின்றன

காகங்கள் கூடிக் கத்துகின்றன
உள்ளிருப்பது மனிதக் குரலென்றோ…

நாற்சந்தியில்

அங்கங்கே நாற்சந்தியில் நிற்கும்
இவ்வீரனை
யாருக்கும் முழுசாகத் தெரியாது
சொல்லிக் கொள்கிறார்கள் பலவிதமாய்…

வெட்கப்பட வேண்டிய கறுப்பு விஷயங்களை மறைத்து
வெண்கலச் சாயம் பூசியிருக்கிறான்

உயரமான கட்டடத்தின் மீதமர்ந்து
கூர்மையுடன் நோக்கும் ஒரு கழுகைப் போல
பார்த்துக் கொண்டிருக்கின்றான்
எதையெல்லாமோ கொத்திச் சென்றவன்

மாலைகளும் பூக்களும் வணக்கங்களும்
அவ்வப்போது உண்டு

கடவுளினும் மேலானவன்
கற்பனைக்கு எட்டாத மேதாவி

அவனை பஜனை செய்யாமல்
அந்தத் தெருவைக் கடக்க முடியாது.
பஜனைபாடிகளின் தெய்வம்
அவன் எழுதியதை யாரும் படிப்பதில்லை
படித்தபடி நடந்ததில்லை படித்தவர்கள்

சிலரின் அனுமதி இன்றி ஒரு பூவைக்கூட
அவன் மீது எறிந்துவிட முடியாது.

அவன் மனிதன் தான் இது ஜனநாயகம்தான்.

இந்த உலகம் கிடைத்தாலும் என்ன?

இந்த மாளிகைகளின், சிம்மாசனங்களின், கிரீடங்களின் உலகம்
இந்த மனிதவிரோதிகளின் சமூகங்களின் உலகம்,
சொத்துக்களின் பசியுள்ளோரின் செல்வத்துக்கான உலகம்,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் தான் என்ன?


ஒவ்வொரு இதயத்திலும் காயம்,
 ஒவ்வொரு ஆத்மாவும் தாகத்தில்,
பார்வைகளில் தவிப்பு, மனங்களில் துயரம்,
இது என்ன உலகமா? இல்லை அர்த்தமற்றவைகளின் ராஜியமா?,
 இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

எங்கு மனிதனின் ஆளூமை ஒரு பொம்மையோ
இது பிணங்களை கும்பிடுபவர் குடியிருப்பு,
 எங்கு மனிதனின் வாழ்வைவிட மரணம் விலைகுறைந்ததோ
 இந்த உலகம் கிடைத்துவிட்டாலும் என்ன?

இளமை சுற்றித் திரிகிறது அவநம்பிக்கைகளுடன்,
இளைய உடல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன விற்பனைக்காக,
எங்கே காதல் வியாபாரமாகிறதோ,
அந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

இந்த உலகம் இங்கே மனிதன் ஒரு பொருட்டில்லை,
உறவின் உறுதியோ, தோழமையோ ஒன்றும் இல்லை,
எங்கே காதலுக்கு ஒரு மரியாதை இல்லையோ,
இந்த உலகம் கிடைத்துவிட்டாலும்தான் என்ன?

எரித்துவிடுங்கள் இதை, ஊதி அணைத்துவிடுங்கள் இந்த உலகை,
என் முன்னாலிருந்து அகற்றிவிடுங்கள் இந்த உலகை,
இந்த உலகம் உங்களுடையது அதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்
_______________________________________________________________________________

ப்யாசா(Pyasaa) கவிஞர் சாஹிர் லுதியான்வி,: பாடியவர் மொகம்மது ராஃபி

படத்தில் கவிஞன் நொந்து பாடும் பாடல். எப்போது கேட்டாலும் மனதை உலுக்கும் வார்த்தைகள், இசை, குரல். கடைசி வார்த்தைகளில் வர வர உச்ச ஸ்தாயிக்குச் சென்று,..குரல். சாபமாகிச் சுடும். (Pyasaa, a  film by Gurudutt)

Tuesday, 9 February 2010

பாரா முகம்

குடிகாரக் கணவனுக்காக காத்திருக்கும் இரவுகளில்
பல்லியின் மொழி புரிந்து விடுகிறது

எதிர்வீட்டுத் திரைச்சீலை
காற்றில் படபடக்க
குழந்தையின் அழுகுரலும்
அதைத் தேற்றும் ஆண்குரலும்..

மழைபொழியும் இரவுகளில்
முகம்பார்த்துப்
புன்னகைக்கும் வாய்ப்புண்டு

நனைந்து தெளிந்து விட்டதென
வீட்டுக்கும் கொண்டு வந்து
சேவு, மிக்ஸர் கேட்பதும் உண்டு

வாசற்படி நிலைக்குமேல்
புன்னகைக்கும் புகைப்படக் குழந்தை
அவளைப் பார்த்தே சிரிக்கிறது

அவன் ஒருநாளும்
பார்த்ததில்லை அதை

Wednesday, 3 February 2010

சாக்கடை இனம்

சென்னையின் கூவம் புறப்பட்டு விட்டது

திருப்பூர் நொய்யலைத் தொட்டு விட்டது
திருச்சியில் காவிரியைத் தந்தியாய்த் தொட்டது
வைகைக் கரையில் மாளிகை கட்டுது
தாமிர பரணிக்குத் தூது விட்டது
தென்காசி அம்பையைத் தேடுகின்றது

மொகஞ்சோ தாராவில் சாக்கடை கட்டிய
திராவிட இனத்தில்
ஊருக்கு ஊர் சாக்கடை கட்டும் திட்டமில்லை
சிங்காரப் பூங்காக்கள் அங்கங்கே சுருட்டச்
சிவில் இஞ்ஜினீயர் உண்டு
அவர்க்குச் செம்மொழி அறிவும் உண்டு

இல்லற ஜோதி

இரண்டாவது மனைவியின்
புடவை துவைத்துப் போட்டு
சமையல் செய்யும்
புண்ணியவான்
முதல் மனைவி
தட்டெடுத்து தேனீர் தராததால்
விட்டு வந்தவர்

அக்காவின் கேள்விகள்

முள்ளின் வடித்தது அக்காவின் சிலை
இறந்த போது அழக்கூட
அம்மாவோ அப்பாவோ அண்ணனோ இல்லை
அப்பா கொடுத்தனுப்பிய உள்ளத்தின் இருள்
வீட்டில் குடியிருந்தது

என் மனதில் இருக்கும் அக்காவின் கேள்விகள்
அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால்
ஏன் பெற்றாய் என்னையும் எனக்கு முன்
ஐந்து பேரையும் ?

சும்மா வந்து சுண்ணாம்பு தேய்க்க
தெருவில் இருக்கும் கல்லா நான்?

பதில் சொல்ல அப்பா இல்லை
அம்மா இல்லை
கடவுளும் இல்லை
யாரேனும் உண்டோ?

பொழுதைப் போக்குதல்

வார்த்தைகளில் நடந்தேறிய
புரட்சிகளில்
மடங்கி விழுந்தது மனிதாபிமானம்

வரிகளில் சிந்திய ரத்தத்தில்
உடலிலிருந்து வெளியேறியது
சுரணை

நடனமாடும் எல்லாச் சிலைகளிலும்
உயிரைத் தேடி
களைத்துப் போனது ஏழ்மை

யாரும் பார்க்க விரும்பவில்லை
வதையை
பொழுது போக்கவேண்டுமாம்
பூமியில்

நகரத்தின் வழியே

உருகி வழியும் தார் ரோடுகளில்
அடித்த வெய்யிலை
நிறையப்பேர் கோட்டிலும், டையிலும்
பிடித்துக் கொண்டனர்

லோடு இழுக்கும் தொழிலாளருடன்
நடந்து போகும் பள்ளிச் சிறுமியின் முதுகில்
கல்வியின் தரம் எலும்பை ஒடித்தது

கண்ணாடிப் புடவை கட்டிய
மேய்ப்பர்க் கூலிகள் நெடிதுயர்ந்து அழைக்கின்றன
இன்னும் பல ஆடுகளை
பரமண்டலத்தின் ஒத்திகையாக
புகைமண்டலம் வாகனங்கள் உபயம்

காலையில்
தள்ளாடித் தள்ளாடிக்
கீரை விற்கவரும்
எழுபது வயதுக் கிழவரின் குரலில் தெறிப்பது
மனிதாபிமானமற்ற தேசத்தின்
மரணஓலம்.
எந்த நாளும் எனக்குரியதல்ல
ஏற்கனவே எழுதப்பட்ட வரிகள்
இருக்கின்றன நான் வாசிக்க
இசையமைத்து வைத்திருக்கிறார்கள்
நான் பாடும் பாடலை

கனவுகளில் வருகின்றன
துன்புறுத்தும் இழப்பின் கணங்கள்
தூக்கமும் எனக்குரியதல்ல
சுவற்றின் நடுவில் பதுக்கிச்
சிமெண்ட் பூசப்பட்ட செங்கல் நான்
வெளியேறிப் பார்த்தால்
என்னையே எனக்கு
அடையாளம் தெரியாது

கனவில் வாசலிலே
காத்திருக்கும் கற்பனையே
நீயும் எனக்கல்ல..