Wednesday, 23 November 2011

சிலுவை கிடைக்காத மனிதன்


அவன்
ஒரு சிலுவைக்காகவே ஏங்கினான்
மனதையும், உடலையும்
பொருளையும், ஆவியையும்
அர்ப்பணிக்கத் தயாராக இருந்தான்

மதஞானிஇடம் சென்றான்
'செத்தபின் கிடைக்கப் போகும்
பதவிகளுக்காக
தியாகங்களை அடை காத்திரு

அரசியல் வாதிகள் சொன்னார்கள்
"கட்சிக்காக, கொள்கைக்காக
நாட்டுக்காக ..
எனக்காக
நீ தியாகங்கள் செய்யலாம்
பிழைத்திருந்தால் உனக்கும்
கொஞ்சம் உண்டு

குடும்பத்தினர் சொன்னார்கள்
"எங்களுக்காக..... எல்லாம் ...எல்லாம்"
அவன் ஒரு சிலுவைக்காகவே
ஏங்கினான்
அது கிடைக்காமல் போய்க்கொண்டிருந்தது

சிலுவைகளும்
தங்களில் அறையப்படும்
'பெரிய' மனிதர்களுக்காகவே
காத்திருக்கின்றன .

Friday, 14 January 2011

விதைத்ததும் வதைத்ததும்

வார்த்தைகளைப் புதைத்துவிட்டு
வசதிகளைப் பின்தொடர்ந்தேன்
கனவுக் கடலில்
மிதந்து,
கரையொதுங்கி
விடிகாலையில் விழிகளைத்
தட்டித் திறந்து
மனம் குடையும் வார்த்தைகள்

தோட்டத்தில்
கொலைசெய்து புதைத்த
பிணத்தின் விரல் மட்டும்
அதிர்ச்சி தர
வெளி நீட்டல் போல
வரும்
வார்த்தைகளின்
அடங்கிய உயிர்த்துடிப்பு
சில நேரம் கேட்பது போலிருக்கும்