கரைதல்
பெண்ணே
கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன
ஆணென்பதால் என்னை வெறுக்காதே
உன்னைப்போல் ஒரு பெண்தான்
என்னை வளர்த்தாள்
உன்னை கடுங்காவலில் வைத்தார்கள் என்னாதே
என்னை உனக்காகத்தான் ஒடித்தார்கள்
நாமும் ஒப்பினோம்
துணை தேவையென்று
என்
மூளையில் அழுகிய குப்பைகள்
என்று வெறுக்காதே
வானத்திலிருந்து எதையும் நான்
எடுத்து வரவில்லை
நாம் அழகானவர்கள் தாம்
மனதிலும் உடலிலும்
உன்
இதயத்திலும் கபடங்கள் உண்டு
என்னில் அதன்
எதிரொளி கண்டு
அஞ்சாதே
என்னிலும் பூமணம் உண்டு
நான் கடவுளாகவும்
நீ தேவதையாகவுமே
விரும்பினோம்
போட்டி போட்டுக் கொண்டு
சாத்தானாகவும்
பேயாகவும் ஆனோம்
இந்தச் சமூகம் மிகக் கொடுமையானது
நம் மீது மலைமலையாய்ப்
பாரங்களை ஏற்றிவைத்துவிட்டு
விளையாடு என்கிறது
ஒருவர் துயரங்ககளை
இன்னொருவர் பார்த்துச்
சிரிக்கலாம்
இதுதான் நமது சுதந்திரம்
எந்தச் சுவாமிகளாலும்
சட்டங்களாலும்
முடியாது
நீயும் நானும் மட்டுமே.
முடிந்தால்
சமாதானம் செய்துகொள்வோம்
பிரிவோம் அல்லது
சந்திப்போம்
ஆனால்
மகிழ்ச்சியாக இருக்க
முயலுவோம்
கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன.
Monday, 26 October 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment