Monday, 26 October 2009

கரைதல்



பெண்ணே
கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன

ஆணென்பதால் என்னை வெறுக்காதே
உன்னைப்போல் ஒரு பெண்தான்
என்னை வளர்த்தாள்

உன்னை கடுங்காவலில் வைத்தார்கள் என்னாதே
என்னை உனக்காகத்தான் ஒடித்தார்கள்
நாமும் ஒப்பினோம்
துணை தேவையென்று

என்
மூளையில் அழுகிய குப்பைகள்
என்று வெறுக்காதே
வானத்திலிருந்து எதையும் நான்
எடுத்து வரவில்லை

நாம் அழகானவர்கள் தாம்
மனதிலும் உடலிலும்

உன்
இதயத்திலும் கபடங்கள் உண்டு
என்னில் அதன்
எதிரொளி கண்டு
அஞ்சாதே
என்னிலும் பூமணம் உண்டு

நான் கடவுளாகவும்
நீ தேவதையாகவுமே
விரும்பினோம்
போட்டி போட்டுக் கொண்டு
சாத்தானாகவும்
பேயாகவும் ஆனோம்

இந்தச் சமூகம் மிகக் கொடுமையானது
நம் மீது மலைமலையாய்ப்
பாரங்களை ஏற்றிவைத்துவிட்டு
விளையாடு என்கிறது

ஒருவர் துயரங்ககளை
இன்னொருவர் பார்த்துச்
சிரிக்கலாம்
இதுதான் நமது சுதந்திரம்

எந்தச் சுவாமிகளாலும்
சட்டங்களாலும்
முடியாது
நீயும் நானும் மட்டுமே.

முடிந்தால்
சமாதானம் செய்துகொள்வோம்
பிரிவோம் அல்லது
சந்திப்போம்
ஆனால்
மகிழ்ச்சியாக இருக்க
முயலுவோம்

கொஞ்சம் கணங்களே
நம்மிடம் உள்ளன.

No comments:

Post a Comment