Saturday, 3 October 2009

காந்தி பிறந்த நாளில்




தினமும் கீரை விற்க வரும்

கிழவனின் குரலில்

இழையும் தனிமை

எப்போதாவதுதான்

என்னிடம் எழுகிறது



பாறையாய் புத்தகங்களைச்

சுமக்கும் குழந்தைகள்

என்றைக்காவது தான்

நான் பார்க்க நேருகிறது



தினமும் என்னால்

வதை பட்டுக் கொண்டிருக்கும்

மனைவியின் குரல்

எப்போதாவதுதான்

எனக்கு ஒலிக்கிறது


வேண்டுமென்றே நான்

பார்வையை விலக்கிக் கொள்ளும்

குஷ்டரோகியின்

வலி

எப்போதாவது தான் எனக்கு

அனுபவமாகிறது



எதுவேனும் செய்ய எத்தனித்து

வருடத்தில் ஒவ்வொருநாள்

இவர்களுக்கு செலுத்திவிடுகிறேன்

அஞ்சலி

 * * * * * * * * * * * * * * * * * * * * * *


எனது நடிப்பு




பாவியென்று மட்டும் என்னை அழைக்காதே

நல்ல மனிதனாக இருந்தது தவிர

நான் எதுவும் செய்யவில்லை



தோற்றுவிட்டேன் என்று மட்டும் நினைக்காதே

விளையாட்டை அனுபவிப்பதிலேயே

மகிழ்ந்திருந்தேன்

வெற்றியின் வெறியில் அல்ல



அதிகாரியாக மிடுக்கவில்லை என்று

நகையாடாதே

எளியவர்களின் துயரத்தை நான்

பார்த்திருந்தேன்



சாமர்த்தியம் இல்லையென்று

பழிக்காதே

தேவையில்லை என்றுதான்

நினைக்கிறேன்



எழுதத் தெரியவில்லை என்று

ஒதுக்காதே

அறிவினால் மட்டும் அன்பைப்

பகிர முடியாதென்று அறிந்திருக்கிறேன்

* * * * * ************   ******* * * * * *
 
 
 
 
கடவுளைத் தோற்கடித்தவன்





மழை நாளின் இரவில்

காணாமல் போன நண்பன்

கடற்கரையொரம்

படுத்திருப்பான்

அங்கே விளையாடும்

குழந்தைகளை

வேடிக்கை பார்ப்பான்

மனைவியுடன் அமர்ந்திருக்கும்

கணவன் சிரிக்கிறானா என்று

கவனித்திருப்பான்



உன்னுடன் வாழமாட்டேன்

என்று போன மனைவி

பிறக்காமல் போன குழந்தை

அழகிய பெண்ணாயிருந்தும்

வாழாவெட்டி என்று ஊரார் சொல்லத்

திரும்பி வந்து சிதைந்து கொண்டிருக்கும்

அழகு அக்கா

முன்னரே மணம் முடித்தாலும்

நாற்பத்தைந்து வயதில்

மனைவியுடன் சேரும் பாக்கியமுள்ள

அண்ணன்

அப்பா இருக்கும்போது மணம்முடித்தும்,

பிரிந்து வந்து, ஐம்பது வயதில்

கணவனுடன் வாழப் போன

மூத்த அக்கா



காட்டாற்று வெள்ளம் போல்

பாயும் நிகழ்வுகளின்

சூத்திரதாரி கடவுளென்றே

நினைத்திருந்தான்

பக்திப் பரவசத்தில்

பிறவிக்கடலைக் கடக்க

எத்தனித்தான்

சமூக நியதிகள்

அனைத்தும் காத்தான்

எதிலும் கிட்டவில்லை

மனஅமைதி



காணாமற் போன நண்பன்

கடற்கரையோரம்

தேடிக்கொண்டிருக்கக் கூடும்

 ஏதாவதொன்று

- - - - - - - - - ------ -------------------- ------------------
 
 
 
கலங்கரை சேருமா? கலங்குதல் நேருமா?


புலன்களை அடக்கியே புலம்புதல் ஆகுமா?

தவறுகள் தொடருமா? தவிப்புகள் அடங்குமா?

கவலைகள் தீருமா? கனவுகள் பொசுங்குமா?



இலக்கியம் ஊறுமா? இலக்கின்றி ஓடுமா?

உலகெனும் சேற்றிலே உழல்வதே நியாயமா?

கலைகளின் அருள்ஒளி கண்களில் வீசுமா?

பலபொருள் தேடலில் காலமே கரையுமா?



கடவுளைத் துதிப்பவன் கோவிலைச் சுற்றலாம்

மடங்களை மதிப்பவன் குருவிடம் கற்கலாம்

குடங்களைக் குடிப்பவன் குடித்தே அழியலாம்

இடவலம் என்றுநான் எங்குதான் செல்வதோ?



இன்றைய பசிக்கென இறைஞ்சினால் போதுமோ?

எதிர்வரும் நாளையின்(று) இருட்டிலே தூங்குமோ?

பதில்வரும் நாள்வரை பயணத்தை நிறுத்தவோ?

எதுவரும் என்றுநாள்? எண்ணியே ஏங்கவோ?

No comments:

Post a Comment