எத்தனை முறை எழுதினாலும்
கவிதை எழுத முடிவதில்லை.
எத்தனை முறை முயன்றாலும்
ஒரு நல்ல கதையும் உருவாகவில்லை
என்ன தான் செய்தாலும்
பணத்திப் பெருக்கும் வழி
பிடிபடவில்லை, பிடிக்கவும் இல்லை
அறிவுரைகள் பல கிடைத்தாலும்,
தகிடுதத்தங்கள் கைவரவில்லை.
ஒழுங்காக வேலை செய்தால்,
அதுமட்டும் போதவில்லை
நல்லவனாய் இருப்போமே என்ற
ஆசைமட்டும் குறைவதில்லை
இருப்பதை வைத்து வாழ்வோமெனில்
உறவுகள் விடுவதில்லை
பலபல ஊர்கள் அனுபவங்கள்
பெற விரும்புகிறேன் ஆனால்
ஒரே இடத்தில் நிற்பதற்குக் கூட
ஓடிக் கொண்டிருக்கிறேன்
புத்தகங்கள் படிக்கின்ற ஆசை
தீரவில்லை
பூவுலகில் வலிகளுக்கு வழி தேடி
சிந்திப்பது நிற்கவில்லை
புத்திசாலி இல்லையென்று
நன்றாகத் தெரிகிறது
முட்டாளாய் இருக்கவே
மனம் விழைகிறது
குழப்பங்களின் மடியினில்
அசந்து உறங்குகிறேன்
பகலில் உலகை மாற்றும்
கனவுகளைக் காண்கிறேன்
மனிதர்கள் அனைவரையும்
நேசிக்க விரும்புகிறேன்
உன்னதக் காரியங்களில்
உழைக்க விரும்புகிறேன்
மஹாத்மாவாகத்தான்
மாற வேண்டுகிறேன்
மனிதனாக இருப்பதற்கே
தட்டுத் தடுமாறுகிறேன்
எதுவுமிவை கூடாமல்
இருட்டில் தவிக்கின்றேன்
நான் யாரென்று நீங்கள் சொல்ல
எதிர்பார்த்திருக்கின்றேன்
வே.ராஜகோபால்
Friday, 7 August 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment