Saturday, 8 August 2009

ஆசைத் தீயிலே


புள்ளினம் நானெனப் போதையில் மிதக்கிறேன்
புதியதோர் நாடகம் போடநினைக்கிறேன்
கொள்வதில் இலக்கியக் கோடுகள் இணைக்கிறேன்
கூவ நினைக்கையில் குரலை மறக்கிறேன்
பள்ளியில் பயில்கையில் பாடநி னைத்தவன்
பருவம் வந்ததும் பாதை திரும்பினேன்
உள்ளத்தில் உள்ளதை ஒதுக்கி விட்டவன்
உலகத்தின் புயலிலே மாட்டி மயங்கினேன்

பள்ளத்தில் விழுந்து பரிதவிக்கிறேன்
பயணம் மாற நீச்சலைத் துவக்கினேன்
கொள்ளுவோர் கொள்ளலாம் குரைப்பவர் சிரிக்கலாம்
கொப்பளிக்குமென் ஆர்வத்தை ரசிக்கிறேன்
வெள்ளமாய்ப் பெருகிய வேதனை குறையலாம்
வீறு கொண்டெழும் புதிய ஊற்றிலே
அள்ள அள்ளஎன் ஆர்வம் பெருகுதே
ஆசைத் தீயிலே உலகம் ஒளிருதே

No comments:

Post a Comment