Monday, 7 September 2009


தாத்தா இறந்த நாளில்

தாத்தா இறந்த நாளில்
நான் அவரைப் பார்க்கவில்லை

என்றுமே அவர் என்னைப்
பார்க்க விரும்பியதில்லை
அவரைப் பார்க்கப் போனபோது
எங்களை விரட்டியது நினைவுண்டு

அம்மா
என்னையும் தங்கையையும்
கீழ்ச்சாதி அப்பாவையும்
விட்டுவிட்டுப்
பணிய வேண்டும்
அவருடைய
நெடுநாளைய அவா
தன் சம்பளத்தையும்
அவரிடமே தந்திருக்க வேண்டும்

அம்மாவுக்கும் ஆசைதான்
உயர்ஜாதியில் பிறந்தவள்
உயர்ஜாதியில் சாக விரும்பினாள்
சொர்க்கத்திலும் உண்டு ஜாதி



தாத்தா இறந்த நாளில்
நான் அவரைப் பார்க்கவில்லை
கருமாதிச் செலவுக்குப் பணம்
அனுப்பி வைத்தேன்
இல்லையெனில்
அவர் சொர்க்கத்துக்குப் போகாமலிருந்து
அந்தப் பாவம்
எங்களை வந்து பிடிக்கும்
அவரே பேயாகி
தொந்தரவு செய்யக்கூடும்

சொர்க்கத்தில்
எனக்காக
துண்டுவிரித்து இடம்பிடித்து
அவர் காத்திருக்கக் கூடும்
நான் அங்கே போகவிரும்பவில்லை

தாத்தா இறந்த நாளில்
அவரிடம் பேசவில்லை
அதற்கு முன்னாலும்தான்

No comments:

Post a Comment