அங்கங்கே நாற்சந்தியில் நிற்கும்
இவ்வீரனை
யாருக்கும் முழுசாகத் தெரியாது
சொல்லிக் கொள்கிறார்கள் பலவிதமாய்…
வெட்கப்பட வேண்டிய கறுப்பு விஷயங்களை மறைத்து
வெண்கலச் சாயம் பூசியிருக்கிறான்
உயரமான கட்டடத்தின் மீதமர்ந்து
கூர்மையுடன் நோக்கும் ஒரு கழுகைப் போல
பார்த்துக் கொண்டிருக்கின்றான்
எதையெல்லாமோ கொத்திச் சென்றவன்
மாலைகளும் பூக்களும் வணக்கங்களும்
அவ்வப்போது உண்டு
கடவுளினும் மேலானவன்
கற்பனைக்கு எட்டாத மேதாவி
அவனை பஜனை செய்யாமல்
அந்தத் தெருவைக் கடக்க முடியாது.
பஜனைபாடிகளின் தெய்வம்
அவன் எழுதியதை யாரும் படிப்பதில்லை
படித்தபடி நடந்ததில்லை படித்தவர்கள்
சிலரின் அனுமதி இன்றி ஒரு பூவைக்கூட
அவன் மீது எறிந்துவிட முடியாது.
அவன் மனிதன் தான் இது ஜனநாயகம்தான்.
Tuesday, 16 February 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment