Saturday, 9 January 2010

ஏரிக்கரை

எல்லாத் திசைகளிலிருந்தும்
வருகின்ற பறவைகள்
எல்லாத் திசைகளிலும்
காற்றில் இசைத்துச் செல்லும் காவியங்கள்


திரும்பவேண்டும் என்றே கிளம்பியவை
தங்கிவிடும் ஏரிக்கரைகளில்
மீன்கள் துள்ளிப் பாய்ந்தெழுதும்
சிறுகவிதைகளை ரசிக்க


மரங்கள் வரைந்த சிற்பங்களைக்
காற்றுத் தழுவிக் காதல்செய்யும் போது
அலைகள் எழுப்பும் சல சல
கரையில் தவமிருக்கும் கற்களை
தொட்டுவரும்


மழையின் பொழிவு
பூமியின் நெஞ்சைத் தோண்டி எடுக்கும்
உயிர்களுக்குக் கருணை வழங்க


ஒருபோதும் குறைவதில்லை
ஏரிக்கரையில் அன்பு

******************************
அவன் இன்னும்

எல்லாப் பதவிகளையும்
அலங்கரித்த பின்னும்
இன்னும்
எல்லாப் பட்டங்களைப்
பெற்ற பின்னும்
இன்னும்
கணக்கிலாச் சொத்துக்களைப்
சேர்த்தபின்னும்
இன்னும்
புத்தகங்களைப் படித்தபின்னும்
எல்லா ஞானங்களைப் பெற்ற பின்னும்
எல்லாப் பித்தங்களும்
தெளியவில்லை இன்னும்
எல்லாச் சந்தேகங்களும்
எழுகின்றன மீண்டும்
நார்ஸிஸியஸ் போல
பாறையை உருட்டிக் கொண்டு
ஏறுகிறான் மலைக்கு
மீண்டும் மீண்டும்

****************************

காதல் கவிதைகள்
எழுதிக்கொள்ளலாம்
குவிந்திருக்கும் பெண்துயரங்களையும்
ஆணின் பொசுக்கும் வக்கிரங்களையும்
கலைத்தபின்
என்றுதான் நினைத்தேன்
கூட்டுக்குள்
தீயெரிகையிலேயே தொடங்கிவிடுகிறது
காட்டுக்குள்
மனதை சமனப்படுத்தும்
மெல்லிய இசை
காத்திருக்க முடியவில்லை
ஒன்று முடிந்தபின்
இன்னொன்று என்று..

No comments:

Post a Comment