Wednesday, 27 January 2010

இளமையில் வதை

கள்ள நோட்டுகளைப் போல
நடுவில் நுழைந்து விடுகின்றன
தவறுகளின் நினைவுகள்
கண்கள்,, மனம் கூசும்படியாக..
பதுக்கி வைத்து ரகஸியமாகக் கடத்த வேண்டியிருக்கிறது
அவற்றை..

நம்மால் துயருற்றவர்கள்
கதவுகளைத் தட்டிக்கொண்டுதானிருந்தார்கள்
வேறுமாதிரி நடந்துகொண்டிருக்கலாம்
இளமையில் நாம் இழைத்த அநீதிகளின்
துரத்தப்பட்ட நினைவுகளில்
எப்படித் தேடுவது அவர்களை?
மன்னிப்புக் கேட்க......


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நினைவு மத்தாப்புக்கள்


மறக்கவே முடியாது
பத்து வயதில் ஹாஸ்டலில்
ரொம்ப நேரம் என்முறைக்காக காத்திருந்து
என்னிடம் இல்லாத பத்துக் காசை வாங்காமலேயே
எவர்சில்வர் தட்டில் பெயர்பொறித்துக் கொடுத்து
தன்னை என் மனதில் எழுதிச் சென்ற
கைவினைஞனை

மறக்கவே முடியாது
சைக்கிள் ரிக்க்ஷாவில்
அலறிக் கொண்டு
மகனைத் தூக்கிச் சென்ற நேரம்
ஆஸ்பத்திரியில் கொண்டுவிட்டுக்
அவசரத்தில் உள்ளே போகச் சொல்லிக்
காசு வாங்க மறுத்த
மனிதனை

No comments:

Post a Comment