Friday, 22 January 2010

ஐஸ்-கிரீம்


கூடாதென்று டாக்டர் சொன்னபின்
மனைவியும் பிள்ளைகளும் மறுத்தபின்னும்
ஒதுக்கமுடியவில்லை

சிறுவயதில்
அடுத்தவர்கள்
வாங்கிச் சுவைக்க
வெறும்நாக்கைச் சப்புக்கொட்டி
வேடிக்கை பார்த்ததை

முகத்தைத் வேறுபுறம் திருப்பிக் கொண்ட
தோழர்கள் எவரும்
வாங்கித் தரமாட்டாரா
என்றேங்கியதை

ஒவ்வொரு முறையும்
ஞாபகத்தில்
உருகி வழிகிறது
பாலைஸ்

* * * * * * * * * * * * * * * ****************************************
 
 



ஒரு சின்ன நாற்காலிதான் தேவை
ஒரு சின்ன மேஜையோடு

எனக்குத் தெரிந்த மொழிகளில்,
எனக்குத் தெரியாத வரிகள்
வளைந்தோடி மயக்கும் புத்தகங்கள்
எப்போதும் நிரம்பி வழியும்
அமுதசுரபியாக இருக்கட்டுமே
அந்தச் சிறிய மேஜை

அச்சிறிய மேஜையில்
குறிப்பெடுக்க்க் காகிதங்களோ, எழுதுகோலோ
தேவையில்லை
உலகத்தின் உண்மைகள் எல்லாம்
ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன
ஆனாலும்
வாழ்க்கையின் நாடகம்
இன்னமும் இருக்கிறது
ஏராளம் ஏராளம்

நான் வரிகளில்
உணர்ச்சிகளின் கவர்ச்சி நடனத்தை நேசிக்கிறவன்
உண்மையின் நிர்வாணத்தை ரசிக்கும் பெருங்காமுகன்
மனிதர்களின் உன்னதங்களைப் பருகும் பெருங்குடிகாரன்
உலகத்தின் துயரங்களுக்காக
தன்னைச்
சிலுவையில் அறைந்துகொள்ளும்
ஒன்றும் இயலாதவன்

நான் கேட்பதொன்றும் பெரிதில்லை
ஒரு சின்ன நாற்காலியும்
புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன மேஜையும்


 

No comments:

Post a Comment