Monday, 18 January 2010

கண்களை வருடுவது


பாத்திகளுக்குள் பாய்ந்த நீர்
வேர்களைத் தேடுவதுபோல்
இருட்டுக்குள் வைத்த காலடிகள்
இன்னும் தேடுவது எதை?

காட்டுப்பன்றி நிலத்தில் கிழங்கைத்
தோண்டுவது போல
கனவுக்குள் புதைந்த வார்த்தைகளை
தோண்டி எடுப்பது எது?

விழிகள் அலைந்தலைந்து
மனம் குடைந்துகுடைந்து
சலித்துக் களைத்தபின்
மனதை வருடுவது
குழந்தைப் பருவத்திலிருந்து
பின் தொடர்ந்து வரும்
நீல வானின் நட்சத்திரங்கள்.




தொலைபேசியின் கேள்வி
கண்காணாத் தேசத்தில்
வேலைக்குச் சென்றபின்
ஆண்டுக்கொரு முறை
அப்பாவின் குரல் நேரில்
கேட்கும்

போன்பூத்துக்கு நடக்கமுடியாத
தள்ளாமையின் காலம்
வீட்டுக்குப் போன் வந்ததும்
ஒரே முறை
அரைகுறையாய்.. காது கேளாமல்..
பேசிவிட்டு அப்பா
கீழ்வைத்த ரிசிவர்
அவர் இறந்த நாளிலிருந்து…
தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது
நினைவில்
இன்னும் சிலமுறை பேசியிருக்கலாம் காசு பற்றிக் கவலையின்றி
என்று

No comments:

Post a Comment