Saturday, 19 December 2009

ஆய்வின் நீளம்


பட்டாம் பூச்சிகளுக்கு
உத்தரவிட்டாகிவிட்டது
பூக்களைத் தீண்டாதீர்
சோதனைச் சாலைகளில் மட்டுமே
அனுமதி உண்டு
விஞ்ஞானிகளின் மேற்பார்வையில்

சிறகுகளை வெட்டியாகி விட்டது
மலர்கள் கண்ணாடிக் கூடுகளில்
மகரந்தங்கள் சேகரிக்கப்படும்
சோதனைச் சாவடிகளின்
கண்ணாடிச் செவ்வகங்களில்
பூச்சிகள் அமர நாற்காலிகள்

அழகாக இல்லாத மொட்டுகள்
கருக்கப்படும்
அழகான பூக்களுக்குப்
பாதுகாப்புக் கொடுக்கப்படும்

தோட்டங்கள் அமைக்கவும்,
பூக்கும் காய்க்கும் காலம்
அனைத்தும்
சுகாதார விதிகளின் படி

புதிய பூக்களுக்கு
வளரும் வரை இரும்பிலும்
வளர்ந்த பிறகு தங்கத்திலும்
விலங்குகள் மாட்டப்படும்

நாம் கடவுளாக முடியாதென்று சொல்லி
மனிதர்களாகலாம்
இப்படி
செயற்கையாக எல்ல்ல்லாம் செய்துகொண்டே

 
 
 

No comments:

Post a Comment